Posts

Showing posts from August, 2021

சீட்டு சேமிப்பு

 ஆரம்ப பள்ளிக்கூடத்துக்கு மிக அருகில் உள்ள ஒரு வீட்டில் ஒரு அம்மையார் சேமிப்பு அட்டை தருவார். அதில் முப்பது கட்டங்கள் இருக்கும். ஐந்து பைசா அட்டை ஒன்றை அம்மா வாங்கி தந்தார். தினமும் அந்த அட்டையையும் ஐந்து காசையும் கொடுத்தால் ஒரு கட்டத்தில் முத்திரை குத்தி அம்மையார் தருவார். இப்படி முப்பது கட்டங்கள் முடிந்ததும் மொத்த காசை தருவார்கள் அதை வீட்டில் அம்மாவிடம் கொடுப்பேன். இப்படித்தான் சேமிக்கும் பழக்கம் வளர்ந்தது.  

ஆசைதம்பி

 எங்க ஊர் பாடகர். ஆம். திரை இசைப் பாடல்களை அப்படியே பாடி அசத்தும் சூப்பர் சிங்கர். அப்போது எஸ். பி. பாலசுப்பிரமணியம், மலேசிய வாசுதேவன் குரல்களில் மிக நன்றாகப் பாடுவார். அப்போதைய திருச்சி காவேரி ஸ்டீல் மில்லில் வேலை செய்து வந்தார். பணி நேரம் போக ஓய்வில் எப்போதும் இலங்கை வானொலி, திருச்சி வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படும் பாடல்களை கேட்டு இரசிப்பதும், பாடுவதும் தொடர் கதை. அவருடன் அவர் நண்பர் வேளாங்கண்ணி சேர்ந்து விட்டால் அந்த இடமே களை கட்டும். வானொலி கேட்பதற்குப் பழகினேன். பாடல்களை இரசித்தேன். செய்திகள் கேட்டேன். இளைய பாரதம் கேட்டேன். நாடகங்கள் கேட்டேன். காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் வானொலி பட்டிமன்றம் கேட்டேன். இலங்கை வானொலி அறிவிப்பாளர் அப்துல் ஹமீது குரலில் மயங்கினேன். அவர் குரலில் மயங்காதார்  யார்? ஆசை தம்பி மற்றும் குழுவுடன் பாட்டு கச்சேரி கேட்க போவதும் இசை மற்றும் கலைஞர்களை இரசிப்பதும் அப்போதும் எப்போதும் பிடிக்கும்.

சுப்பு

 சுப்பு காஸ் கோடோனில் வேலை செய்து வந்தார். திரை இசைப் பாடல்கள் கொண்ட புத்தகங்கள் நிறைய வைத்திருப்பார். கவிஞர் கண்ணதாசன், வாலி போன்றோர் எழுதிய  திரைப்படப் பாடல்கள் அடங்கிய பைண்டிங் செய்த தொகுப்பை ஆவலோடு படிப்பேன். ஒவ்வொரு வரிகளாக படிப்பேன். எழுத்து நடையை இரசிப்பேன். பாடல் வரிகளைப் படிக்க படிக்க அதன் அர்த்தங்கள் புரியும். கண்கள் ஆச்சர்யதோடு விரியும். ஒவ்வொரு பாடலிலும் சில வரிகள் பிடிக்கும். தமிழ் அர்த்தங்கள் விரியும். கவிஞர்களின் கற்பனை ஆச்சர்யமூட்டும். விழியே கதை எழுது... மஞ்சள் வானம்... தென்றல் காற்று... உனக்காகவே... நான் வாழ்கிறேன்...         

உலகப்பன்

 நாட்டுப்புறப் பாடல்களை மிக லாவகமாக பாடியவர். இவரின் குரல் அவர் செல்லும் வழியெங்கும், வயலெங்கும் ஒலித்தது. குழந்தைளிடம் உறவு முறை சொல்லி மரியாதையோடு பழகியவர். குழந்தைகள் முன்னாலும் பாடி அவர் இருக்கும் இடத்தில் கலகலப்பை உண்டாக்குவார். தென்னை ஓலையில் புல்லாங்குழல் செய்து வாசிக்கும் போதும் இசை மேதையாக மாறுவார். பாடும்போது ஆட்டமும் சேர்ந்து விடும். எங்கள் ஊருக்கு அப்போது அவர் ஒரு நடிகர் நாகேஷ்.